My WordPress

Edit Content

+91 90922 17572

info@vallalarmim.org

கொள்கை குறிப்பு

உலகம் தழைக்க 19-ம் நூற்றாண்டில் நம் தெய்வத் தமிழ்நாட்டில் அவதரித்தவர். திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க அடிகளார் ஆவார். அவர்கள் ஓதாதே உற்ற கலைகள் அனைத்தையும் உணர்ந்து தேன் தமிழில் “திருவருட்பா” பாடி, மனித குலம் உயர்வு பெற மரணமிலாப் பெருவாழ்வு வாழ்ந்திட வழிகாட்டியவர். வாழ்ந்தும் காட்டியவர்.

வள்ளலாரின் அன்பு நெறியையும் போதனைகளையும், உலகியல் கல்வியையும் இணைத்து கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்கும் பொருட்டு இந்நிறுவனம் துவங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சன்மார்க்கம் பரவ தொண்டு செய்த மாத்தூர் தவத்திரு. “ப.அருணாச்சல சுவாமிகள்” தானமாக கொடுத்த சொத்துக்கள், நன்கொடைகளைக் கொண்டு சென்னை அருட்திரு உயிர் உறவு கூ. சங்கரய்யா அவர்கள் சீரிய வழிகாட்டுதலோடு “வள்ளலார் மாணவர் இல்லம்” (42/1986) பதிவு செய்யப்பட்டு புதுக்கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்க மேற்பார்வையில் செயல்படுகிறது..

22.06.1986 அன்று அப்போதைய புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமிகு இல. பழமலை. இ.ஆ.ப. அவர்களால் வள்ளலார் மாணவர் இல்லம் திறந்து வைக்கப்பட்டது. 16 ஏழை, எளிய மாணவர்களுடன் துவங்கப்பட்ட இவ்வில்லத்தில் இருந்து கடந்த 38 ஆண்டுகளில் சுமார் 2080 மாணவர்கள் பயின்று வெளியே சென்றுள்ளனர். “தற்சமயம் 2025-26 கல்வி ஆண்டில் 105 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சேர்ந்த பெற்றோரை இழந்த, ஏழை, எளிய மற்றும் சன்மார்க்க குடும்பங்களைச் சார்ந்தவர்கள். இங்கு தங்கியுள்ள மாணவர்கள் உள்ளூரில் உள்ள அரசு துவக்கப் பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர்.”

இக்கருணை இல்லத்தின் சிறப்பு அம்சங்கள்

  • மாணவர்கள் அதிகாலை 5.00 மணிக்கு எழுந்து தியானம், அருட்பா, திருக்குறள், யோகா பயில்கின்றனர்.
  • ஞாயிறு/விடுமுறை நாட்களில் தோட்டக்கலை, உடற்கல்வி சிறப்பு வகுப்புகள் நடைபெறுகிறது.
  • வள்ளலாரின் வாழ்வியல் நெறிகள் சொல்லித்தரப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகளில் மாணவர்கள் பங்கு பெறுகின்றனர். வடலூர் தைப்பூச விழாக்களுக்கு மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
  • ஒவ்வொரு மாணவனின் உடல், உள்ளம், கல்வி நலனில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.
  • மாணவர்கள் குறித்த நிறைகுறைகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உடனடியாக பெற்றோர்/பாதுகாவலர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
  • இங்கு பயின்று வரும் மாணவர்கள் மாநில அளவிலான யோகா போட்டிகளில் விழுப்புரம், கோவில்பட்டி (தூத்துக்குடி) புதுக்கோட்டை முதலான ஊர்களுக்கு சென்று முதல், இரண்டாம் இடங்களைப் பெற்று பரிசு சான்றிதழ்கள் பெற்றுள்ளனர்.
  • விளையாட்டுப் போட்டிகளில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வரை மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
  • பொதுத்தேர்வில் இம்மாணவர்கள் முதல் 2-ம் மற்றும் 3-ம் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
  • ஏழைகளின் ஊட்டியா ? என வருவோரைச் சற்றே மெய்யுணர்வுடன் சிந்திக்கச் செய்யும் அமைதியான மரங்கள்அடர்ந்த இயற்கைச் சூழல்

இம்மாணவர் இல்லத்தின் வளர்ச்சிப் பாதைகளின் வரலாற்று மைல்கற்கள்

  • 1986-ம் ஆண்டு இல்லம் பதிவு செய்யப்பட்டு தொடங்கப்பெற்றது.
  • 1992-ம் ஆண்டு அரசு அங்கீகாரத்துடன் அரசு மான்யம் கிடைத்து வருகிறது
  • 1994-ம் ஆண்டு மாணவர்கள் தங்கும் ஓட்டுக் கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கு ராஜபாளையம் தவத்திரு சத்தியமூர்த்தி சுவாமிகளின் பெரும்பங்கோடு, மாவட்ட சுற்று வட்டார சன்மார்க்க அன்பார்களின் ஒத்துழைப்போடு கட்டப்பட்டது. இக்கட்டிடம் 26.06.1994 அன்று அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு த. சந்திரசேகரன், இ.ஆ.ப. அவர்களால் திறந்து வைக்கப்பெற்றது.
  • 1999-ம் ஆண்டு மேலும் பல வளர்ச்சி பணிகள், விவசாயப் பணிகள், அறப்பணிகள் மேற்கொள்ள “வள்ளலார் அறநிலையம்” (Valllar Charitable Trust / Rgd.208/1999) என்ற பெயரில் நிறுவப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
  • 2013-ல் குழந்தைகள் பாதுகாப்புத் துறை விதிகளின்படி புதிய கெட்டிக் கட்டடம் 4000 சதுரடியில் இல்லத் தலைவர் டாக்டர். இராம்தாஸ் அவர்கள் மற்றும் பொதுமக்கள் நிதியுதவியுடன் கட்டப்பட்டு தேவையான உள்வசதிகளுடன் மாணவர்கள் பயன்பாட்டில் உள்ளது.
  • பல நன்கொடையாளர்கள் ஒத்துழைப்புடன் புதிய சமையலறை, பொருள் வைப்பு அறை, உணவுக்கூடம் கட்டப்பட்டு 01.01.2006-ல் அப்போதைய மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு S.ரகுபதி B.Sc., B.L., அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
  • திருமிகு ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் வழிகாட்டுதலுடன் சிறப்பாக இயங்கி வருகிறது.
  • கூடுதலாக மாணவர்களை தங்கி கல்வி பயில வசதியாக கல்விப்பணியில் சிறந்து விளங்கும் திருமிகு. கோல்டன் சிங்காரம் அவர்களின், எஸ்.வீ. பவுண்டேசன் மூலமாக சுமார் 4000 சதுரடி உடன் கூடிய முதல் தள கட்டடம் கோல்டன் சிங்கார் அரங்கம் முழுவதும் இலவசமாக கட்டி 15.07.2019 அன்று திறந்து வைக்கப்பட்டது.
  • சன்மார்க்க சங்க அன்பர்கள், அரசு அலுவலர்கள், ரோட்டரி அமைப்புகள், ஜேசிஐ, லயன்ஸ் மற்றும்பொதுமக்கள் என சமுதாயத்தின் அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்புடன் இவ்வில்லம் இயங்கி வருகிறது. மேலும் அவர்களின் பிறந்த நாள், குழந்தைகளின் பிறந்த நாள், பெற்றோர்களின் பிறந்த நாள், திருமண நாள் முதலான சிறப்புக் காரணத்தை முன்னிட்டு அன்னதானம், கல்வி உபகரணம், சீருடை, படுக்கைகள், சமையற் பாத்திரங்கள் முதலானவைகள் அன்பளிப்பு செய்து வருகின்றனர். அத்துடன் அரசு மான்யம், விவசாயம் மூலம் பெறப்படும் பொருட்களைக் கொண்டு நிர்வாகம் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர் சேர்க்கை விபரம்

தமிழகத்தின் பின்தங்கிய, கிராமப்புற மாணவர்கள் ஒவ்வொரு கல்வி ஆண்டின் (Every Academic Year) போதும் நிறுவன சேர்க்கை விதிமுறைப்படி தகுதியின் அடிப்படையில் சேர்க்கப்படுகின்றனர்.

வேண்டுகோள்!

  • கருணை உள்ளம் கொண்ட அன்பர்கள் கீழ்கண்ட வகையில் இம்மாணவர் இல்லத்திற்கு உதவிகள் செய்ய வேண்டுகிறோம்.
  • ஒவ்வொரு கல்வி ஆண்டின் போதும், சீருடைகள், எழுது பொருட்கள், புத்தகங்கள் கொடுத்து உதவலாம்.
  • பிறந்த நாள் விழாக்கள், திருமண நாள், முன்னோர் நினைவு தினங்களில் அன்னதானம் வழங்கி உதவலாம்.
  • இல்லத்தின் நிரந்தர கட்டுமானப் பணிகளில் நிதி உதவிகள் செய்யலாம்.
  • சமையல் பாத்திரங்கள், மளிகை, காய்கறி, அரிசி முதலான உணவுப்பொருட்கள் வாங்கித்தந்து உதவலாம்.
  • சிறப்பு உணவுத் திட்டத்திற்கான ஒருநாள் (மூன்று வேளை) உணவுக்கு ரூ. 14000/- (காலை, இரவு உணவுக்கு தலா ரூ.4000/- வீதமும், மதிய உணவுக்கு மட்டும் ரூ. 6000/- நன்கொடையாக வழங்குகிறார்கள்.
  • பொங்கல், தீபாவளி, புத்தாண்டுகள் முதலான பண்டிகை காலங்களில் சீருடை, இனிப்புகள் வழங்கலாம்.
    சிறப்பு உணவிற்காக வங்கியில் நிரந்தர வைப்பு நிதி ஏற்படுத்தி அதன் வட்டித் தொகையின் மூலமாகவும் ஆண்டுதோறும் நன்கொடை வழங்கலாம்.
  • இல்லத்திற்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 80G வருமான வரிவிலக்கு உண்டு.
  • சிறப்பு உணவு திட்டத்தில் பங்கு பெறுபவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வருகை தந்து சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு, தாங்களும் மாணவர்களுடன் உணவருந்தி பங்கு பெற்று மகிழலாம்.